விழுப்புரத்தில் 2 நாட்களில் 35 செ.மீ மழை பொழிவு: வெள்ளக்காடான விரிவாக்கப் பகுதிகள்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை பரவலாக மழை பெய்தது. அதன்படி விழுப்புரம் நகரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக விழுப்புரம் நகரில் 35 செ.மீ மழை பெய்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக.12) முதல் 17-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை பரவலாக மழை பெய்தது. அதன்படி விழுப்புரத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

விழுப்புரத்தில் பெய்த தொடர் கனமழையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தது.

மேலும் நகர விரிவாக்கப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வீதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் தனித்தீவாகின. விழுப்புரம் நகரில் தொடர்ந்து இரண்டு நாட்களில் 35 செ.மீ மழை பெய்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE