போக்குவரத்து ஊழியர் கோரிக்கை: ஆக.19-ல் தொழிற்சங்கங்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சினைகளை களைய வலியுறுத்தி ஆக.19-ம் தேதி தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் சென்னையில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், அண்மையில் நடைபெற்றது. இதில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான பொது கோரிக்கை உருவாக்கி, துறையின் அமைச்சர், செயலர் ஆகியோரை சந்தித்து மனு கொடுப்பது எனவும், அனைத்து நிர்வாகங்களுக்கும் அனுப்பி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அரசிடம் சமர்ப்பிக்கும் கோரிக்கைகளை விளக்கி ஆக.19-ம் தேதி மாலை 3 மணிக்கு சென்ன, பல்லவன் இல்லம் முன் கூட்டம் நடத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 25 ஆயிரம் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தனியார்மய நடவடிக்கையை கைவிட்டு, அனைத்து பிரிவிலும் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்துக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE