ஆவடி அருகே பணியின்போது பாதாள சாக்கடையில் விழுந்து ஊழியர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஆவடி: ஆவடியில் பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின்போது, ஒப்பந்த ஊழியர் திடீரென உள்ளே தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, அருந்ததிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத்(25). இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். கோபிநாத், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆவடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைகளை தூய்மைப்படுத்துதல், அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட, ஜெ.பி.எஸ்டேட்- சரஸ்வதி நகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து, அதை ஜெட்ராடிங் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் கடந்த 2 நாட்களாக கோபிநாத் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதில், நேற்று பகல் 12.30 மணியளவில், கோபிநாத், பாதாளச் சாக்கடையினுள் இறங்கி, ஜெட்ராடிங் இயந்திரத்தின் குழாயை இணைக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் மேலே ஏறிய நிலையில் திடீரென நிலை தடுமாறி மீண்டும் பாதாளச் சாக்கடையின் உள்ளே விழுந்தார். அப்போது கழிவு நீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கோபிநாத் சடலத்தை மீட்டனர். ஆவடி போலீஸார், கோபிநாத் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோபிநாத் உயிரிழந்த இடத்தை நேற்று ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆனால், கோபிநாத் பாதாள சாக்கடைக்குள் இறங்கி ஜெட்ராடிங் இயந்திரக் குழாயை இணைத்துக் கொண்டிருந்தபோது, விஷவாயுவை சுவாசித்ததால் மயங்கி உள்ளேயே விழுந்து இறந்துவிட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE