தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியுள்ளது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஈரோடு: தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்தங்கி உள்ளது. இதற்கு ஜிஎஸ்டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதை கணிக்க முடியும். தமிழகம் ஜிஎஸ்டி மாநில வருவாய் மைனஸ் பாயின்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவை நோக்கிச் சென்று உள்ளது

தொழில்முனைவோருக்கு போதுமான வசதிகளை தமிழகஅரசு ஏற்படுத்தித் தரவேண்டும். தமிழகத்தில் இருந்து தொழில்முனைவோர் வேறு மாநிலத்துக்குச் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக கட்சி ஒருவனைப் படி படி என்று சொல்லுமே தவிர,. மற்ற கட்சி போன்று குடி குடி என்று சொல்லாது. அதனால்தான் இங்கிலாந்து சென்று படிக்க உள்ளேன். அத்திக்கடவு அவிநாசி திட்டம் காலதாமதமாகி வருகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். தமிழக அரசியல் 2026-ம் ஆண்டு தேர்தலில் அடியோடு மாறும். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் எடை அதிகரிப்புக்கு மோடிதான் காரணம் என திமுக போஸ்டர் ஒட்டுகிறது. இதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா? என்று தெரியவில்லை.

கார் பந்தயம் நடத்துவதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. கார் பந்தய சாலைக்கு ஒதுக்கிய ரூ.40 கோடி நிதியைப் பள்ளிகளின் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம். பேராசிரியர்கள் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE