வணிக பிரிவில் வீடு, கடை சேர்த்து கட்டினாலும் 300 ச.மீட்டர் வரை மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று தேவை இல்லை

By செய்திப்பிரிவு

சென்னை: வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தாலும், புதிய மின்இணைப்பு பெறகட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

வீடு, கடை, வணிக நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் கட்டி முடித்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பணி நிறைவு சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால்தான் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

குடியிருப்பு திட்ட பிரிவில் 8 வீடுகள் அல்லது 750 சதுரமீட்டருக்குள் கட்டும் கட்டிடங்களுக்கு புதிய மின்இணைப்பு வழங்க பணி நிறைவு சான்றுபெறுவதில் இருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிகப் பிரிவில் 300 சதுர மீட்டர் வரையும், 14 மீட்டர் உயரத்துக்கு மிகாமலும் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்இணைப்பு வழங்க பணிநிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து கடந்த ஜூன் மாதம் விலக்கு அளிக்கப்பட்டது. எனினும், பல இடங்களில் ஒரே கட்டிடத்தில் தரை தளத்தில் கடை, மேல்தளத்தில் வீடு கட்டும்போது கட்டிட நிறைவு சான்று கேட்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தாலும், மின்இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ்கேட்க கூடாது என பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE