கல்லூரி மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

கோவை: உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் தொடக்க விழா,கோவை அரசு கலைக் கல்லூரிவளாகத்தில் நேற்று நடந்தது. திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான அட்டைகளை (‘டெபிட் கார்டு’) மாணவர்களிடம் வழங்கினார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வரலாற்றில் என்றும் நமது பெயரை சொல்லும் திட்டமாக உருவாகியுள்ள ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைக்க மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். இந்தவிழாவுக்கு நான் வருவதற்கு முன்பு,நடப்பு மாதத்துக்கான ரூ.1,000-ஐ நேற்று இரவே உங்கள் வங்கிக்கணக்குக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.

ஆட்சிக்கு வந்தவுடன், மகளிர்விடியல் பயணத்துக்கு முதல் கையெழுத்திட்டேன். விடியல் பயணத்தை இதுவரை 518 கோடிமுறை பெண்கள் பயன்படுத்திஉள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. குழந்தைகளின் பசியை போக்கும் ‘காலை உணவு’திட்டத்தால் 20.73 லட்சம் மாணவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடுகின்றனர். நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 28 லட்சம்மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து, வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்துள்ளோம்.

புதுமைப் பெண் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறோம். அதேபோல, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை உருவாக்கிஉள்ளோம். உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை மேலும்அதிகரிக்க, அரசுப் பள்ளிகளிலும்,அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சிபெற்றவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். கலை, அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு படிக்கும் பட்டப் படிப்புகள், 4 ஆண்டு பொறியியல் படிப்புகள், 5 ஆண்டு மருத்துவப் படிப்புகள், 3 அல்லது 4 ஆண்டுகள் படிக்கும் சட்டம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், அதற்கு இணையான படிப்புகள் படிக்கும் மாணவர்கள், 8 மற்றும் 10-ம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி படிப்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

3.28 லட்சம் மாணவர்கள் பயன்: தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம்3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டுரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்படும்.

நான் உங்களிடம் கேட்பது என்னஎன்றால், 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இதன்மூலம் வளர்ந்த நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் உயரும்.

அடுத்து, எல்லா மாணவர்களும் உயர்கல்வி படிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளிப் படிப்பு முடிந்ததும், உயர்கல்வி கற்காமல் திசைமாறி சென்றுவிட கூடாது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப, நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டும். நம் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படித்து வாழ்வில் சிறக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. இந்த இலக்குகளை அடைய, நான் கடுமையாக உழைத்து புதிய பல திட்டங்களை உருவாக்கி உள்ளேன். இந்த திட்டங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நன்கு படித்து, உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட வேண்டும். வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த, அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை நாம் வருங்காலத்தில் உருவாக்க வேண்டும். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும். கல்வி கற்க தடங்கல் ஏற்பட்டால், அதை உடைத்தெறிந்து மாணவ சமுதாயம் வெற்றி பெற வேண்டும்.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியவீராங்கனை வினேஷ் போகத் பல தடங்கல்களை எதிர்கொண்டார். ஆனாலும், முடங்கிவிடாமல், தைரியமும், அசாத்திய துணிச்சலும் கொண்ட பெண்ணாக போராடி, இன்று நாம் பாராட்டும் அளவுக்கு உயர பறக்கிறார். தடைகளை பார்த்து சோர்ந்துவிட கூடாது. முடங்கிவிட கூடாது. தடை என்பதேஉடைத்து எறியத்தான். வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, முத்துசாமி, கீதா ஜீவன்,அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் கணபதி ப.ராஜ்குமார், ஈஸ்வரசாமி, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, கோவை மேயர் ரங்கநாயகி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். சமூகநலத் துறை செயலர் ஜெய முரளிதரன் நன்றி கூறினார்.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தைமுதல்வர் தொடங்கி வைத்த நிலையில், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு பணம் எடுப்பதற்கான அட்டைகளை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE