உளுந்தூர்பேட்டையில் புதிய விமான நிலையம் அமைக்க மக்களவையில் ரவிக்குமார் வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: “உளுந்தூர் பேட்டையில் புதிதாக விமான நிலையம் அமைத்து, புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்” என்று மக்களவையில் விழுப்புரம் எம்பி டி.ரவிக்குமார் பூஜ்ஜிய நேரத்தில் வலியுறுத்தி பேசினார்.

இது குறித்து இன்று மக்களவையில் விழுப்புரம் எம்பி டி.ரக்விகுமார் பேசியது: “உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி அங்கு விமான நிலையம் அமைத்துத் தர வேண்டும். ஏற்கெனவே 17 -வது நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை எழுப்பினேன். உதான் திட்டத்தின் கீழ் அது சேர்க்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இம்முறையாவது அதை செய்து தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் அது புதுச்சேரி தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்தப் பகுதிகளை நன்கு அறிந்த அமைச்சர் இதை கட்டாயம் செய்து தர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். விமான கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கூறினார்கள். அந்த கோரிக்கையை நான் வழிமொழிகிறேன். அது மட்டுமின்றி விமானம் தாமதமாகும் போது அதற்காக பயணிகளுக்கு இழப்பீடு தர வேண்டும். ஏனென்றால் காலத்தை எதனாலும் திரும்ப பெற முடியாது. காலத்தின் அருமை கருதி தாமதமாகும் நிலை ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு தருவதற்கு முன் வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE