ராமேசுவரம் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

By கி.தனபாலன்


ராமேசுவரம்: தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ரத்து செய்து, சனிக்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்ல ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரத்திலிருந்து ஜூலை 31-ம் தேதி கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இம்மீனவர்களின் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்ததில், மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். மேலும் மீனவர் ராமச்சந்திரன் மாயமானார். இவரை இன்னும் தேடி வருகின்றனர். மேலும் மீனவர்கள் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய 2 மீனவர்களை இலங்கை கடற்படை மீட்டு ராமேசுவரத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், இலங்கை கடற்படையை கண்டித்தும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்களை வழக்கின்றி தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆக.1 முதல் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்நிலையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ரத்து செய்து, சனிக்கிழமை (ஆக.10) முதல் மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து இன்று ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ராஜீவ் காந்தி விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் மீனவ பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் உயிரிழந்த மீனவரின் உடல் மற்றும் உயிர் பிழைத்த 2 மீனவர்களை ராமேசுவரத்திற்கு கொண்டு வந்ததற்கும், காணாமல் போன மீனவரை தொடர்ந்து தேடி வருவதற்கும், மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி.

உயிரிழந்த மற்றும் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கியதற்கும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் மீனவ பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்து, ஆகஸ்ட் 10 முதல் அனைத்து விசைப்படகுகளும் எல்லை தாண்டாமல் பாதுகாப்பாக மீன்பிடிக்கச் செல்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE