கோவை கணியூரில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

By இல.ராஜகோபால்

கோவை: கோவை கணியூரில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.9) திறந்து வைத்தார்.

கோவை மாவட்ட திமுக சார்பில், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரில் உள்ள இந்திரா நகரில் 8 அடி உயரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தின் அருகே, கலைஞர் அறிவுசார் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரே 116 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.இன்று அரசு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் கணியூருக்கு சென்று இந்திரா நகரில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலை, நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 116 அடி உயர கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக மாவட்டச் செயலாளர்கள் தளபதி முருகேசன், நா.கார்த்திக், தொ.அ.ரவி உள்ளிட்ட திமுகவினரும் கலந்து கொண்டனர். முன்னதாக சிலை திறப்பு விழாவுக்கு வந்த முதல்வரை சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்து வரவேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE