திருச்சி ரவுடி என்கவுன்ட்டர் சம்பவம்: கோட்டாட்சியர் விசாரணைக்கு ஐகோர்ட் தடை

By கி.மகாராஜன் 


மதுரை: திருச்சி ரவுடி என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டது தொடர்பான கோட்டாட்சியர் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த உமாதேவி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி (42). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. இவர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது துரைசாமியை ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றார்.

இந்த என்கவுன்டரை நீதித்துறை நடுவர் தான் விசாரிக்க வேண்டும். ஆனால், புதுக்கோட்டை கோட்டாட்சியர் விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதித்து, நீதித் துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார். இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும், அதுவரை கோட்டாட்சியர் விசாரணைக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE