“தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் நீலகிரியில் 1,090 மாணவர்கள் பயன்” - அமைச்சர் கா.ராமச்சந்திரன்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 14 கல்லூரிகளைச் சேர்ந்த 1,090 மாணவர்கள் பயனடைவார்கள் என சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.

சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையின்‌ கீழ்‌ நீலகிரி மாவட்டத்தில் புதுமைப் பெண்‌ திட்டம்‌ தொடங்கி வைக்கப்பட்ட நாள் முதல்‌ அதன் முன்றாம் கட்டம் வரை 21 கல்லூரிகளைச் சார்ந்த 1,037 மாணவிகளுக்கு மாதம்‌ ரூ.1000 வீதம்‌ இதுவரை மூன்று கட்டத்திலும்‌ மொத்தம்‌ ரூ.2,48,898 வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்‌ அரசுப் பள்ளிகளில்‌ பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்க‌வும் அரசுப் பள்ளி மாணவர்களின்‌ உயர் கல்வி சேர்க்கையை உயர்த்தவும் ‘தமிழ்ப்‌ புதல்வன்‌’ திட்டத்தை கோவையில் முதல்வர் இன்று (ஆக.09) தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில்‌, உதகை அரசு கலைக்‌ கல்லூரியில்‌ சுற்றுலாத்துறை அமைச்சர்‌ கா.ராமச்சந்திரன்‌ தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டத்தைத்‌ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். இதில் முதல்கட்டமாக 25 மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்‌, வங்கி டெபிட் கார்டுகளை‌ வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், “விழாவில்‌ மற்ற பயனாளிகளுக்கும்‌ வங்கி டெபிட் கார்டுகள்‌ வழங்கப்பட்டு, ரூ.1,000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின்‌ கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாகவும்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்ட தொடக்க விழாவில்‌ நீலகிரி மாவட்டத்தில்‌ மொத்தம்‌ 14 கல்லுரிகளில்‌ பயிலும்‌ 1,090 மாணவர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. அந்தவகையில் முதற்கட்டமாக தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டத்தில்‌ நீலகிரி மாவட்டத்தில்‌ 1,090 மாணவர்களுக்கு ரூ.1000 வீதம்‌ ரூ.10,90,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும்‌ இந்த நிதியாண்டு முதல்‌ புதுமைப்பெண்‌ மற்றும்‌ தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டம்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயின்ற மாணவ - மாணவியருக்கும்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ளது.‌

மாணவ - மாணவியர் வேறு எந்த உதவித்தொகை பெற்று வந்தாலும்‌ இத்திட்டத்திலும்‌ பயன்பெறலாம்‌. இனிவரும்‌ காலங்களிலும்‌ தகுதியான மாணவர்கள்‌ தங்களது கல்லூரிகள்‌ மூலம்‌ யுஎம்ஐஎஸ் தளத்தில்‌ விண்ணப்பித்து இந்தத் திட்டத்தில்‌ பயன்பெறலாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE