“திமுக அகராதியில் சீரமைப்பு என்றால் கட்டண உயர்வு எனப் பொருள்” - ஓபிஎஸ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: கட்டுமானத் திட்டங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதில், "திமுகவின் அகராதியில், நியாயமாக நிர்ணயிக்கப்படும், சீரமைக்கப்படும் என்றால், அதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்றுதான் பொருள். இதுதான் திராவிட மாடல் போலும்!." என்றும் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கை எண். 468 முதல் 472 வரை கட்டடத் தொழில் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றைக்கூட நிறைவேற்றியதாக தெரியவில்லை. அதே சமயத்தில், வழிகாட்டி மதிப்பு நியாயமாக நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதியும், கட்டட அனுமதிக்கான கட்டணம் சீரமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் முற்றிலும் முரணாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

திமுகவின் அகராதியில், நியாயமாக நிர்ணயிக்கப்படும், சீரமைக்கப்படும் என்றால், அதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்றுதான் பொருள். இதுதான் திராவிட மாடல் போலும்!. இப்படிப்பட்ட திராவிட மாடலின் வழியில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டுமானத் திட்டங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்களை திமுக அரசு உயர்த்தியுள்ளது.

இதன்படி, குடியிருப்பு கட்டடங்களுக்கான கட்டணம் 10 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கட்டடப் பணி நிறைவு பெறும் நிலையில் விண்ணப்பத்திற்கு 2,000 ரூபாய் புதிதாக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மனைக்கு தடையின்மை சான்றிதழ் வழங்க புதிதாக 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பதிவுக்குப் பின் கட்டுமானத் திட்டங்களில் உள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் புதிதாக 5,000 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுமானத் திட்ட முடிவு சான்றிதழ் பெற புதிதாக 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ரியல் எஸ்டேட் முகவர்கள் புதுப்பித்தலுக்கான கட்டணம் தனி நபர்களுக்கு 5,000 ரூபாய், நிறுவனங்களுக்கு 50,000 ரூபாய் என புதிதாக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும். காலதாமதத்திற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுமானத் திட்டத்தை பதிவு செய்த நிறுவனம் அதை திரும்பப் பெற விண்ணப்பித்தால், பதிவுக் கட்டணத்தில் பந்து விழுக்காடு தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும், பதிவு செய்த திட்டத்தில் கால அவகாசம் கோரினால் பதிவுக் கட்டணத்தில் 10 முதல் 50 சதவீதம் வரையிலான தொகை வசூலிக்கப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.

மக்களிடமிருந்து எப்படி தொடர்ந்து வரி வசூலிக்கலாம், மக்கள்மீது கூடுதல் சுமையை எப்படி திணிக்கலாம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திமுக அரசு ஆட்சி புரிந்து வருகிறது. இது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். திமுக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக, எழையெளிய நடுத்தர மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

திமுக அரசால் உயர்த்தப்பட்ட இந்தக் கட்டணங்களையெல்லாம், வீடு வாங்கும் ஏழையெளிய மக்கள்மீது தான் கட்டுமான நிறுவனங்கள் திணிக்கும். திமுக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை, ஏழையெளிய மக்களின் வீடு வாங்கும் கனவை சிதைக்கும் அல்லது அவர்களுடைய கடன் அளவை உயர்த்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்தக் கட்டணமோ, எந்த வரியோ குறைக்கப்படவில்லை. மாறாக, அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு திமுக அரசு பல வரிகளை உயர்த்தியிருந்தாலும், தமிழகத்தின் கடன் அளவு குறைந்திருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஏழையெளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ரியல் எஸ்டேட் ஆணையத்தால் உயர்த்தப்பட்ட அனைத்துக் கட்டணங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE