சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீர் ரத்தால் பயணிகள் அவதி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து லண்டன்செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்த 210 பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

லண்டனிலிருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும்.

அந்தவகையில், நேற்று முன்தினம் மாலை சுமார் 240 பயணிகளுடன், லண்டனிலிருந்து புறப்பட்டு, சென்னை நோக்கிவந்து கொண்டிருந்த விமானம்,திடீரென நடுவானில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லண்டனுக்கு திரும்பி சென்று தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக சரி செய்ய முடியாததால், லண்டன் - சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிப்பதற்காக, சுமார் 210 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை 2.30 மணிக்குமுன்னதாகவே வந்து காத்திருந்தனர்.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று ரத்துஎன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சில பயணிகள் துபாய்,தோஹா, அபுதாபி வழியாக, லண்டனுக்கு மாற்று விமானங்களில் புறப்பட்டு சென்றனர்.

ஆனால் மற்ற பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். பின்னர், அவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றுஅதிகாலை இந்த விமானம், சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE