கல்வித்துறை மூலம் அனைத்து குழந்தைகளும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்: புதுச்சேரி முதல்வர்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பள்ளிகளில் குழந்தைகளிடத்தில் வேறுபாடு பார்க்கக்கூடாது என்று புதுச்சேரி பாஜக, திமுக, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தியதால் கல்வித்துறை மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது அனைத்துக் குழந்தைகளும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 8 மற்றும் 9-ம் வகுப்புகளி்ல் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியர் 3 நாட்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் பேசிய சுயேச்சை எம்எல்ஏ-வான பிரகாஷ்குமார், “புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்கள் சுற்றுலா செலவை அரசு ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களுக்கும் தர வேண்டும்” என்றார்.

இதனைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு;

கல்யாணசுந்தரம் (பாஜக): பள்ளி மாணவர்கள் மத்தியில் வேறுபாடு பார்க்கக்கூடாது. பாகுபாடுகள் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சீருடை தந்துள்ளோம். மாணவர்களை பிரித்துப்பார்க்கக் கூடாது. அனைவரையும் சுற்றுலா அழைத்துச் செல்லலாம்” என்றார்.

(சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு, என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-வான கேஎஸ்பி.ரமேஷ், காங்கிரஸ் எம்எல்ஏ-வான வைத்தியநாதன் உள்ளிட்டோரும் இதை வலியுறுத்தினர்)

பேரவைத்தலைவர் செல்வம்: “முதல்வர் இதுகுறித்து கவனத்தில் எடுத்து கொள்வார்” என்றார்.

இதையடுத்து பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ரங்கசாமி பேசும்போதும் பாஜக எம்எல்ஏ-வான கல்யாணசுந்தரமும் சுற்றுலா விஷயத்தை கோரிக்கையாக எழுப்பினார்.

அதற்கு முதல்வர் ரங்கசாமி, “ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உரிய நிதியை பயன்படுத்தி அழைத்து செல்லச் சொல்கிறோம்” என்றார்.

இதற்கு பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-வான அங்காளன், "இவ்விஷயத்தில் ஏன் பிரித்து அறிவிக்கிறீர்கள். தனியாக ஏன் அறிவிக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து எம்எல்ஏ-க்கள் பலரும் எழுந்து இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இறுதியாக பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, "கல்வித்துறை மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது அனைத்துக் குழந்தைகளும் அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, செந்தில்குமார் (திமுக); 5 முதல் 9ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கற்றல் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்ட கைக்கணினி தருவதை அனைத்துக் குழந்தைகளுக்கும் தாருங்கள்.” என்று வலியுறுத்தினார்.

பேரவைத் தலைவர் செல்வம்; ”முதல்வருடன் கலந்து பேசி அனைத்து மாணவர்களுக்கும் கைக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE