“ஆக.15 கிராம சபை கூட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றுவீர்” - அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: “ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், மாநிலம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “இந்திய விடுதலை நாளையொட்டி, வரும் 15-ஆம் நாள் காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைக் கூட்டங்கள் தான் அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான ஊடகம். அந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெள்ளையர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டாலும் மது அரக்கனிடமிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை. மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள் தான் உண்மையான விடுதலை நாள் ஆகும். எனவே, ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், மாநிலம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE