வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

By கரு.முத்து

நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட கடும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று (ஆக.7) மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், சாணக்கியன், நாகராஜ் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இரவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலை விரித்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இயந்திரப் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த 5 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழிமறித்து படகில் ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, மீன்கள், செல்போன், டார்ச் லைட் உள்ளிட்டவற்றையும் மீன்பிடி வலைகளையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து உடனடியாக 5 மீனவர்களும் அவசரமாக கரைக்குத் திரும்பினர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் தலையில் காயமடைந்த அன்பழகன் உள்ளிட்ட ஐந்து பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற நான்கு மீனவர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்தச் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE