திண்டிவனம் அருகே ஆற்றில் தவறி விழுந்து 3 குழந்தைகள் உயிரிழப்பு

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே நாவல் பழம் பறிக்கச் சென்ற இரு சிறுமிகள் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகள்கள் பிரியதர்ஷினி (10) மற்றும் சுபாஷினி (8) இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் 6 மற்றும் 4ம் வகுப்பில் படித்து வந்தனர். இவர்களுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த விஜி என்பவரது, மகன் சஞ்சய் (10) ஆகிய 3 பேரும் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, நாவல் பழம் பிரிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது மரத்திலிருந்து 3 பேரும் கோனேரிக்குப்பம் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். ஆற்றில் விழுந்த மூவரும் கூச்சலிட்டுள்ளனர். சிறுவர்களின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் மூன்று பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுமிகள் மற்றும் சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஒலக்கூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாவல் பழம் பறிக்கச் சென்று ஆற்றில் விழுந்து சிறுவன் சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி இரங்கல்: “விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சஞ்சய், பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய 3 குழந்தைகள் ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குழந்தைகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE