வங்கதேசம் செல்ல முடியாமல் சென்னை விமான நிலையத்தில் தவிக்கும் வயதான தம்பதி

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கதேசத்துக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னைக்கு சிகிச்சை பெற வந்த வயதான தம்பதி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

வங்கதேசத்தை சேர்ந்தவர் சுசில் ரஞ்சன் (73). இவரது மனைவி புரோவா ராணி (61). புரோவா ராணிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன்பாக மனைவியுடன் சென்னை வந்தார். வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கதேசம் செல்ல முடிவு செய்த தம்பதி, நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் முன்பதிவு செய்தனர்.

விமான நிலையம் வந்தபோது, வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால், அந்நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் சென்னை விமான நிலைய போர்டிகோ பகுதியில் தங்கினர். சொந்த ஊர் செல்ல முடியாமல் வங்கதேச வயதான தம்பதியர் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, வங்கதே தூதரக அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை அமைப்புகள் மூலமாக, அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE