நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை கோரி வைகோ தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2015-ல் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தால் தேனி பகுதியில் நிலவளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கும் பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கும் ஆபத்து நேரிடும்.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லை பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்துள்ளது. மக்களை பாதிக்கச் செய்யும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு எப்போதும் தமிழகத்தை தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை” என்றார். இதையடுத்து நீதிபதிகள், “நியூட்ரினோ திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு தரப்பில், “நியூட்ரினோ திட்டம் தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் விசாரணையை ஆக. 13-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE