புதுச்சேரி வந்த புதிய ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான கைலாஷ்நாதன் புதுச்சேரி ராஜ்நிவாஸுக்கு இன்று மதியம் வந்தடைந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். அவர் நாளை புதுச்சேரி ஆளுநராக பதவியேற்கிறார்.

தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால், துணைநிலை ஆளுநர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவிகளையும் கவனித்தார். தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், குஜராத்தில் பணியாற்றியவர். முக்கியமாக, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. குஜராத் முதல்வர் அலுவலகத்திலேயே 18 ஆண்டுகள் வரை பணியாற்றிய கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற பிறகும் பணி நீட்டிப்பு தரப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாஷ்நாதன் இன்று மதியம் புதுச்சேரி ராஜ்நிவாஸ் வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டு முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ராஜ்நிவாஸ் சென்று கைலாஷ் நாதனுக்காக காத்திருந்தனர்.

முதல்வர் உள்ளிட்டோரின் வரவேற்புக்குப் பிறகு தலைமைச் செயலர் சரத்சவுகான், அரசு செயலர்கள் ராஜ்நிவாஸில் கைலாஷ் நாதனை வரவேற்று அறிமுகம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 11.20 மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமார் புதிய ஆளுநராக நிமியக்கப்பட்டுள்ள கைலாஷ் நாதனுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE