யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தும் நடைமுறைகள்: மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘யூடியூப் சேனல்கள் எந்த வரைமுறையும் இல்லாமல் வதந்திகளையும், உண்மைத் தன்மையற்ற தகவல்களையும் பரப்பி வருகிறது. ஊடக விசாரணை என்ற பெயரில் காவல் துறையினரின் புலன் விசாரணைக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE