கோவை செம்மொழி பூங்கா பணிகளை டிசம்பரில் முடிக்க திட்டம்: அமைச்சர் நேரு தகவல்

By இல.ராஜகோபால்

கோவை: கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் மத்திய சிறை அருகே ரூ.133 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இன்று (திங்கள்கிழமை) காலை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பணிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார். பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 2,500 பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரப்பப்பட உள்ளது. இதில் 85 சதவீதம் தேர்வு மூலம், 15 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும்.

கோவை மாநகராட்சியில் 333 தீர்மானங்களை 10 நிமிடத்தில் நிறைவேற்றியதில் பிரச்சினை இல்லை. அனைத்து தீர்மானங்களையும் பரிசீலித்து மக்களின் தேவைக்காக நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டத்தால் கட்டண உயர்வு என்பது சரியல்ல. நிலத்தின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE