மதுரை: நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து; மதிமுக நிர்வாகிகள் 3 பேர் உயிரிப்பு

By என். சன்னாசி

மதுரை: மதுரை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் மதிமுக நிர்வாகிகள் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுகிழமை) நடந்தது. அக்கட்சியின் தொண்டரணி நிர்வாகிகள் பச்சமுத்து, தலைவா புலி, அமிர்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு அவர்கள் காரில் மதுரை திரும்பினர். மதுரை மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது, அதிகாலையில் எதிர்பாராத விதமாக அவர்கள் கார் மோதிய பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில் மதுரை மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து உட்பட 3 பேரும் உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மேலூர் போலீஸார் 3 பேரின் உடல்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர். மதிமுக நிர்வாகிகள் 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE