மேட்டூர் நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 74,662 கனஅடியாக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து மேட்டூர் அணை கடந்த 30-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. அணைக்கு கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 70 ஆயிரம் கனஅடியானது. இந்நிலையில், நேற்று இரவு 74,662 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து விநாடிக்கு 70,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சியாகவும் உள்ளது.

தொடர்ந்து 5-வது நாளாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது. அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. வருவாய்த் துறையினர் கரையோரப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.

85 ஆயிரம் கனஅடி: இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் காவிரி நீர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE