4,970 தற்காலிக ஆசிரியருக்கு தொடர் பணி நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை அரசாணை

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 4,970 தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு 2028-ம் ஆண்டு வரை தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ் 2011-12-ம் கல்வியாண்டில் 710 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அந்த பள்ளிகளுக்கு தலா 5 பேர் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் என மொத்தம் 4,970 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த தற்காலிக பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த மார்ச்சுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து, ஊதிய கொடுப்பாணை மூலமாக இந்த பணியிடங்களில் உள்ள ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொடர்ந்து சம்பளம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் 4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதையேற்று 4,970 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2028-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை தொடர் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE