தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஆக., 04,05) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்து.

இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 6, 7 தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 8,9, 10 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 4 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம், சென்னை ஆலந்தூர், சென்னை விமானநிலையம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கோமுகி அணை, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சென்னை பள்ளிக்கரணை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 8-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE