மத்திய அரசின் கல்வி கடன் திட்டம்: தமிழக அரசுக்கு பாஜக கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராமப்புற, ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கல்வித் துறை வழங்கும் வட்டியில்லா கடன் திட்டம், விக்சித் பாரத் திட்டம், டாக்டர் அம்பேத்கர் மத்திய கல்விக் கடன் திட்டம் மற்றும் வித்யா லட்சுமி கல்வி திட்டம் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் கனவு நனவாகி வருகிறது.

தமிழகத்தில் தகுதியான மாணவர்கள் உயர்கல்வி படிக்க வசதியாக, வங்கிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் ஒன்றிணைந்து கல்விக் கடன் வழங்கும் திட்டங்களை எளிமைப்படுத்தி வேகமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசும் உறுதுணையாக செயல்பட வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ இயக்கங்களையும் சமூக ஆர்வலர்களையும் ஈடுபடுத்தி ஒன்றிணைந்து செயல்படும்போது அதிகமான மாணவர்கள் பயன்பெறுவர்.

இந்திய மாணவர்கள் சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் உலக அளவில் சிறந்து விளங்குவதற்கு பிரதமரின் மிகவும் எளிமைப் படுத்தப்பட்டுள்ள விரைந்த கல்விக்கடன் திட்டம் ஒரு மைல்கல்லாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE