தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து: மெட்ரோ ரயில், பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மெட்ரோ நிலையம், பேருந்து நிறுத்தங்களை நோக்கி பயணிகள் படையெடுத்தனர். மெட்ரோ ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. பேருந்துகள் போதிய அளவில் இல்லாததால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் வரும் 14-ம் தேதி வரை ஏற்கெனவே 63 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்படும் ரயில்களுக்குப் பதிலாக, கடற்கரை – பல்லாவரம் இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், போதிய அளவில் ரயில் சேவை இல்லாததால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

மெட்ரோ நிலையங்களுக்கு படையெடுப்பு: சென்னை பூங்கா, எழும்பூர், மாம்பலம்,கிண்டி உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் நேற்று நெரிசல் மிகுந்த காலை, மாலையில் கூட்டம் அலைமோதியது. குறிப்பிட்ட நேரம் வரை காத்திருந்து, சிறப்பு மின்சார ரயில்களில் நெரிசலுடன் பயணம் செய்தனர். ஏற்கெனவே, மின்சார ரயில் ரத்தை அறிந்து, பொதுமக்களில் பெரும்பாலான வர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களை நோக்கிப் படையெடுத்தனர்.

இதனால், மெட்ரோ ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருப்பினும், பேருந்து நிறுத்தங்களில் போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால், பயணிகள் அவதிப் பட்டனர். கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், பொத்தேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி வழியாகப் பாரிமுனைக்குச் செல்லும் மாநகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், நெரிசலில் சிக்கி, பயணிகள் அவதிப்பட்டனர்.

போதிய அளவில் பேருந்துகள் இல்லை - இது குறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், கிண்டி, பாரி முனைக்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போதியஅளவில் பேருந்துகள் இல்லாததால், பயணிகள் நெரிசலில் சிக்கி அவதிப் பட்டனர். வரும் 14-ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து இருப்பதால், இத்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE