சென்னையில் 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: “சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையத் ரீஜன்சி, தி பார்க் (Ratta Somersett, Taj Club House, VVA Hotels (Radisson Blu), Hyatt Regency, The Park) ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.

ஆதலால், சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும், அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE