போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறைக்கு எதிராக ஆக.6-ல் சிஐடியு சார்பில் கருத்தரங்கம்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த முறைக்கு எதிராக ஆக.6-ம் தேதி சிஐடியு சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறுகையில், “போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகிறது. குறிப்பாக, மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து தனியார் மூலம் இயக்க முடிவு செய்துள்ளனர். இதுபோன்று தனியார் மயத்தை நோக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது போக்குவரத்துக் கழகங்களுக்கும், பொதுமக்களுக்கும் விரோதமான செயல்பாடாகும். இதுபோன்ற அரசின் முயற்சிகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினோம். இதன் தொடர்ச்சியாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஆக.6-ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் கருத்தரங்குக்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையேற்கிறார். சம்மேளன துணை பொதுச்செயலாளர் வி.தயானந்தம் வரவேற்புரையும், நான் நோக்கவுரையும் ஆற்றுகிறோம். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ உள்ளிட்டோர் கருத்துரையாற்றுகின்றனர்.” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE