செப்டம்பர் முதல் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்: மத்திய கால்நடை அமைச்சக செயலர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் செப்டம்பர் மாதம் முதல்நாடு தழுவிய அளவில் கால்நடைகணக்கெடுப்பு பணிகள் தொடங்கவுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சக செயலர் அல்கா உபாத்யாய் தெரிவித்தார். சென்னையில் 21-வது கால்நடை கணக்கெடுப்பு தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு செயலி வாயிலாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், காணொலி வாயிலாகமத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சக செயலர் அல்கா உபாத்யாய் பேசியதாவது:

உணவு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, ஜிடிபி போன்றவற்றில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளவில் 11.5 சதவீத கால்நடைகள் இந்தியாவில் உள்ளன. அதன்படி, பால் உற்பத்தியில் முதன்மையாகவும், முட்டை உற்பத்தியில் இரண்டாவதாகவும், இறைச்சி உற்பத்தியில் 5-வது இடத்திலும் இந்தியா இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

குறிப்பாக பால் உற்பத்தி 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கால்நடைதரவுகளைக் கொண்டே, பட்ஜெட்டிலும், கொள்கை உருவாக்கத்திலும் கால்நடை வளர்ப்புக்கு தேவையானவற்றை இடம்பெறச் செய்யமுடியும்.

எனவே, நவீன முறையில்செயலி மூலமாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். இதன்மூலம் 27 கோடிக்கும் அதிகமான இடங்களில் இருக்கும்கால்நடைகள் கணக்கெடுக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரைநடைபெறும். அடுத்த ஆண்டுமார்ச் மாதம் தரவுகள்வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் கணக்கெடுப்பு பிரிவு ஆலோசகர் ஜெகத்ஹசாரிகா கூறும்போது, "5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுப்பு நடைபெறும். அந்தவகையில் மண்டல அளவில் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதையடுத்து மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பின்போது, விவசாயிகள் ஈட்டும் வருமானம் குறித்த தகவல்களும் சேகரிக்கப்படும்" என்றார்.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை செயலர் கே.கோபால் பேசும்போது, "கணக்கெடுப்பில் எந்தவித குளறுபடியும் இல்லாதவகையில் தீவிரமாக கண்காணிக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 6,700 கணக்கீட்டாளர்கள், 1,500 மேற்பார்வையாளர்கள், 38 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆண்டு முதல் கால்நடைகளுடன் பல்வேறு பகுதிகளுக்கு பயணிப்போர் விவரமும் சேகரிக்கப்படவுள்ளது" என்றார்.

நிகழ்வில், மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சக இயக்குநர் வி.பி.சிங், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், கூடுதல் இயக்குநர் ஜெ.நவனீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE