குட்கா முறைகேடு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு கோர்ட் சம்மன்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி-யான டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேரும் செப்டம்பர் 9 அன்று நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்கப்பட்டது தொடர்பாக டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் ஆகிய 6 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது முழுமையாக இல்லை எனக்கூறி திருத்திய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சிபிஐ சார்பில் திருத்தம் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே கைதான 6 பேருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என மொத்தம் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை எம்பி - எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் உள்ள மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் மட்டும் ஆஜராகியிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, “இந்த வழக்கில் 21 பேர் மீது கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட அனைவரும் வரும் செப்.9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE