திருச்சி - கொள்ளிடம் மேம்பால கட்டுமானத்தில் சேதம்: நெடுஞ்சாலைத் துறை விளக்கம்

By கி.கணேஷ்

சென்னை: காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருச்சி கொள்ளிடம் பாலத்தின் கீழ் உள்ள மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய இயலவில்லை என்று தமிழக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

திருச்சி - கொள்ளிடம் மேம்பால கட்டுமானத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட விளக்கத்தில், “திருச்சி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தின் பராமரிப்பில் சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கில் கடந்த 2014-15-ல் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் உயர்மட்ட பாலம் 24 கண்களுடன் 792 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டது.

கடந்த 2018-ல் காவிரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டதால் பாலத்துக்கு இணையாக இருந்த பழைய இரும்பு பாலத்தில் 18, 19-வது கண்கள் சேதமடைந்து அடித்துச்செல்லப்பட்டது. புதிய பாலத்தின் பாலத் தூண் 17,18,19, 20, 21 கீழ் நிலத் தூண்கள் வரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு 2 முதல் 4 மீட்டர் ஆழம் வரை, பைல் கேப் மட்டத்துக்கு மண்ணரிப்பு ஏற்பட்டது.

இதனைத் தடுக்கும் விதமாகவும், பாலத்தின் உறுதித் தன்மையை மேம்படுத்தும் வகையிலும் மேற்குறிப்பிட்ட சாலை பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆற்றுப் படுகையைப் பாதுகாக்கும் வகையிலும் பால அடிமானத்தின் அருகில் மணல் சேர்வதற்காகவும் ரூ.6.55 கோடி மதிப்பில் 800 மீட்டர் நீளத்துக்கு மண் தாங்கு சுவர் அமைக்க, கடந்த 2020ம் ஆண்டு மே 19-ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 300 மீட்டர் ஆர்சிசி தடுப்புச் சுவரும், 492 மீட்டர் பிசிசி தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டன.

தற்போது பருவமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக நீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து 1.50 லட்சம் கன அடி நீர் கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு திறந்து விடப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிக அளவு நீர்வரத்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டதால் பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மண் தாங்கு சுவரில் 30 மீட்டர் அளவு பாலம், அதாவது கண் 22, 23-க்கு இடைப்பட்ட பகுதியில் சற்று மேல் நோக்கி தடுப்புச் சுவரானது நகர்த்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதிப்படைந்துள்ள மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய இயலவில்லை. நீர்வரத்து குறைந்த பிறகே பாதிப்படைந்துள்ள தாங்கு சுவரின் விவரங்கள் அறிய இயலும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE