கல்வராயன் மலை மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில், “ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் ஆய்வுகளை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 21-ம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், கல்வராயன் மலைப்பகுதி வனத்துறையின் கீழ் வருவதால் வழக்கில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வனத்துறை தரப்பில் தனியாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE