கருணாநிதி நினைவு நாள்: ஆக.7-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் 6-வது நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட திமுக வெளியிட்டுள்ள அறிக்கை: ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட தலைவர் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி.

அவரது 6-வது நினைவு நாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணி, ஆகஸ்ட் 7, புதன்கிழமை அன்று காலை 7 மணிக்கு நடைபெறும்.

சென்னை , அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ளஅவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், அஞ்சலி செலுத்த திரண்டு வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE