கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்: பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆற்றில் சாய்ந்து விழுந்தது.

மேட்டூர் அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் முழுவதுமாக காவிரியில் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இருகரைகளையும் தொட்டு ஆர்ப்பரித்து ஓடுகிறது.

நேற்று காலை சாய்ந்த நிலையில் காணப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம்

இதில் திருவானைக்கோவில் - நெ. 1 டோல்கேட் இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் புதிய பாலத்தின் அருகே ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தின் அஸ்திவார தூண்கள் தண்ணீர் வேகத்தில் அடித்து செல்லப்பட்டதால் நேற்று காலை முதலே மெதுவாக சாய்ந்து கொண்டே இருந்தது. மின்வாரிய ஊழியர்கள் அதை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தண்ணீர் அதிகம் செல்வதன் காரணமாக தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை சாய்ந்திருந்த உயர் மின்னழுத்த கோபுரம் ஆற்றில் விழுந்தது. இதனால் உயர் அழுத்த மின் கோபுரங்களில் கட்டப்பட்டிருந்த மின் கம்பிகள் பாலத்தின் மீது விழுந்தன.

ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நேற்று காலையிலேயே துண்டிக்கப்பட்டது. மேலும் பாலத்திலும் போக்குவரத்தை தடை செய்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE