ஆக.3-ல் சென்னை - காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

By எம். வேல்சங்கர்

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை - காட்பாடி இடையே வரும் சனிக்கிழமை (ஆக.3) நடைபெறவுள்ளது.

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியில் கவனம் செலுத்தப்படுகின்றன. இதுதவிர, அம்ரித் பாரத் ரயில் (சாதாரண் வந்தே பாரத் ரயில்), வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகளும் நடைபெறுகின்றன. முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிந்தது. தொடர்ந்து, ஐ.சி.எஃப் ஆலை அருகே ரயிலை இயக்கி சோதனை, உள் மற்றும் வெளிப் பகுதிகளில் பல்வேறு சோதனைகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை - காட்பாடி இடையே வரும் சனிக்கிழமை (ஆக.3) நடைபெறவுள்ளது. ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு உயரதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், ஐசிஎஃப் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து சென்னை ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியது: "12 பெட்டிகளை கொண்ட இந்தரயிலில் ஏசி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கும். கண்காணிப்பு கேமரா, அதி நவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில், உள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை - காட்பாடி இடையே ஆக.3-ம் தேதி நடைபெறவுள்ளது. முதலில் வில்லிவாக்கத்தில் இருந்து ஆக.3-ம் தேதி காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, காலை 9 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். தொடர்ந்து, அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10.10 மணிக்கு அடையும். வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10.15 மணிக்குபுறப்பட்டு, அரக்கோணம் வழியாக காட்பாடியை 11.55 மணிக்கு அடையும். காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 180 கி.மீ. வேகம் வரை ரயிலை இயக்க பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE