வயநாடு மேப்பாடி நிவாரண முகாமில் தமிழக அரசு உதவி மைய எண்கள் அறிவிப்பு

By கி.கணேஷ்

சென்னை: வயநாட்டில் உள்ள மேப்பாடி நிவாரண முகாமில் தேவைப்படும் உதவிகள், தகவல்கள் தெரிவிக்க அவசர உதவி மைய எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று (ஆக.1) வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்பு பணிகள் மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். அந்த மீட்புக்குழு உடனடியாக வயநாடு சென்று முழு வீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மேப்பாடி, சூரல்மலை ஆகிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க குழுக்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும், வயநாட்டில் மேப்பாடியில் செயல்பட்டு வரும் முக்கியமான நிவாரண முகாமில் உதவி மையம் ஒன்றை தமிழக மீட்புக் குழுவினர் நிறுவியுள்ளனர்.

அங்கு உதவி மேஜையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களை 98943 57299, 93447 23007 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உதவி மையத்தை தொடர்பு கொள்பவர்கள் தங்கள் பெயர், இடம், தெரிவிக்க விரும்பும் செய்தி ஆகியவற்றை சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE