தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

By சி.பிரதாப்

சென்னை: தண்ணீர் சேமிப்பு, பாதுகாப்பு தொடர்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது

இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாறுபாடு, நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் நீர் மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு அது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாடங்கள், பாடத்திட்டங்களில் யுஜிசி புகுத்தியுள்ளது.

அதேபோன்று நிலத்தடி நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, மழை நீர் சேமிப்பு குறித்து பொதுமக்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளது. எனவே நீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை உயர்கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE