சாலையில் மாடுகளை விடுபவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கியதும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மதிமுக கவுன்சிலர்கள் ஜீவன், சுப்பிரமணியன் ஆகியோர் எழுந்து மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்ததுடன் மத்திய பட்ஜெட்டின் நகலையும் கிழித்து எறிந்தனர். அதுபோல காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் மத்திய அரசு பட்ஜெட் நகலை கிழித்து எறிந்தனர்.

இதனையடுத்து கேள்வி நேரம் நடைபெற்றது. பின்னர்நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர். அதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா விளக்கம் அளித்தார். பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

சென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்குவதற்காகத் தொழில்வரி உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சட்டப்படி இந்த வரி விகிதம் 25 சதவீதத்துக்கு குறையாமலும், 35 சதவீதத்துக்கு மிகாமலும் உயர்த்தப்பட வேண்டும்.

அதன்படி 25%, 28%, 30%, 35% என ஏதாவது ஒன்றின் அடிப்படையில் உயர்த்தினால் எவ்வளவு வரி உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. 6 மாத கால நிகர வருவாய் ரூ.21 ஆயிரமாக இருந்தால் அதற்கு தொழில் வரி கிடையாது. ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ரூ.135 ஆக உள்ள வரி அதிகபட்சமாக (35 சதவீதம்) ரூ.180 ஆக உயரும்.

ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வருவாய் இருந்தால் ரூ.315-ல்இருந்து ரூ.430 ஆகவும், ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக வருவாய்இருந்தால் ரூ.690-ல் இருந்து ரூ.930 ஆகவும் தொழில் வரி உயரும். அதற்கு மேல் வருவாய் இருப்பவர்களுக்கு தொழில் வரியில் மாற்றமில்லை.

பலசரக்குக் கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், ஹெல்மெட் கடை, அரிசிஆலை, மெடிக்கல் ஷாப், ரெடிமேட்கடை, ஐஸ்கிரீம் பார்லர், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில் செய்பவர்களுக்கும் வழங்கப்படும் தொழில் உரிமக் கட்டணமும் உயர்கிறது. இந்தக் கட்டணம் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் அடிப்படையிலும் கடை அமைந்துள்ள கட்டிடத்தின் சதுர அடியின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.

சென்னையில் சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு மாடு ஒன்றுக்கு அபராதத் தொகை ரூ.5 ஆயிரம் தற்போது வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை ரூ. 10 ஆயிரமாக உயர்த்திமூன்றாம் நாள் முதல் தினமும் ரூ.1,000 பராமரிப்பு செலவாக கூடுதலாக வசூலிக்கப்படும். 2-வது முறையாகப் பிடிக்கப்படும் மாடுகளுக்கு அபராதத் தொகையை ரூ. 15 ஆயிரம், மூன்றாம் நாள் முதல் தினமும் ரூ.1,000 பராமரிப்புசெலவு கூடுதலாக வசூலிக்கப்படும்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகளிலும் மற்றும் 7 அரசு மருத்துவமனைகளிலும் தற்போது 390 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்மாஉணவகங்களில் பழுதான பாத்திரங்கள் மற்றும் இயந்திரங்களை சீர் செய்யவும், பழுது நீக்கம் செய்ய இயலாத பாத்திரங்கள், இயந்திரங்களை மாற்றவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொழில் வரி உயர்வு, சிறிய கடைகளுக்குக் கூட தொழில் உரிமக் கட்டணம் உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE