விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கன்னிச்சேரிபுதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கிருந்து சிவகங்கை புறப்பட்டார். அப்போது, சாத்தூர்- விருதுநகர் நான்குவழிச் சாலையில் சூலக்கரை மேடு பகுதியி்ல் வந்தபோது, பைக்கிலிருந்து விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (34) என்பவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்துவிட்டு உடனே தனது காரை நிறுத்தி இறங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முனியப்பனிடம் சென்று விசாரித்து சாலையோரத்தில் அமரவைத்தார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் முனியப்பனை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும், அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE