உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரி வழக்கு: மத்திய அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வழங்க மத்திய விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவிடக் கோரி உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், “இலங்கை, மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில்கூட, விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படுவதில்லை” என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், “உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கக் கோரி மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE