அரசியல் கொலைகளுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

கடலூரைச் சேர்ந்த அதிமுக நகரச் செயலாளர் பத்மநாதன், சிவகங்கையைச் சேர்ந்த பாஜக கூட்டுறவு அணி மாவட்டச் செயலாளர் செல்வகுமார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினர் உஷாராணியின் கணவர் ஜாக்சன் ஆகியோர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், திமுக அரசு பதவி விலக வலியுறுத்தியும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன, சட்டம் - ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இவை காட்டுகின்றன. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய காவல்துறை தவறி விட்டது. அதேபோல், போதை கலாச்சாரமும், அதனால் நிகழும் குற்றச்செயல் களும் தலைவிரித்து ஆடுகின்றன.

இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க ஆணையிட வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அரசு ஊழியர்களை மிரட்டுவது, காவல் துறையினரை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது என திமுகவினரே வன்முறையில் ஈடுபடுவதும், பல சமூக விரோதச் செயல்களுக்கு திமுகவினரே உடந்தையாக இருப்பதும்தான் குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பதற்குக் காரணம்.

சட்டம் ஒழுங்கு சீரழிவில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், காவல் துறையினரைக் கண்டு ரவுடிகள் அஞ்சும் நிலையை ஏற்படுத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தமிழகத்தில் நிகழும் படுகொலைகளைப் பார்க்கும்போது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.

இதனை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகம் கொலை நாடாக மாறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.கே.சசிகலா: தமிழகத்தில் அரசியல் கொலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே நாளில் மூன்று அரசியல் கொலைகள் தற்போது அரங்கேறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தைப்போல் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE