ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நகைக்கடை உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,பணத்தை கைமாற்றிய குற்றச்சாட்டில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லைவிரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.4 கோடி சிக்கியது.

இந்த பணத்தை கொண்டு சென்றதாக பாஜக நெல்லைவேட்பாளரான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் திருவிகநகரைச் சேர்ந் சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம்பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கைமாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இதனிடையே இந்த வழக்குசிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, பணத்துடன் பிடிபட்ட மூவர் மற்றும் நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் உட்பட மேலும் பலருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நயினார் நாகேந்திரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும், நயினார் நாகேந்திரன்,‘பிடிபட்ட பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுஒருபுறம் இருக்க சிபிசிஐடி போலீஸாரின் தொடர் விசாரணையில், ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலமாக கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரை அழைத்து சிபிசிஐடி பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE