காவிரியில் வெள்ளப் பெருக்கு: சேலம் - ஈரோடு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 20,000 கன அடி நீர் திறப்பால், சேலம் - ஈரோடு இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி,, ஈரோடு நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளை இணைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணை மூலம் மின்சார உற்பத்தியும் நடக்கிறது. இந்த இரு மாவட்டத்துக்கு இடையிலான விசைப்படகு போக்குவரத்து மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் இரு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்ட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக நீர் திறக்கப்பட உள்ளது. எனவே, பூலாம்பட்டி பகுதியில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அதனை பயன்படுத்தி வந்த பயணிகள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள கோனேரிப்பட்டி பாலம் வழியாக காவிரி ஆற்றினை கடந்து செல்லும் சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE