ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் ஆக.12 வரை நீட்டிப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத் துறையும் கடந்த ஜூன் 26 அன்று கைது செய்தது.இந்த வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதன்பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால், அவர் காணொலி காட்சி வாயிலாக இன்று (ஜூலை 29) சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 12 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE