பழைய ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து வியாபாரி உயிரிழப்பு: போலீஸார் விசாரணை @ கடவூர் 

By செய்திப்பிரிவு

கரூர்: கடவூரில் ஸ்பிரேயர் கருவியை சம்மட்டியால் உடைத்த இரும்பு வியாபாரி ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (49). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள் வியாபாரி. பழைய பொருட்களை வாங்கி வந்து வீட்டருகேயுள்ள கொட்டகையில் வைத்து பொருட்களை வகை பிரிப்பார். பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் கருவியை சம்மட்டியால் இன்று (ஜூலை 28) உடைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

இந்த வெடிச் சத்தம் சுற்று வட்டாரப் பகுதியில் 1 கி.மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது. மேலும் இது குறித்து தகவலறிந்த பாலவிடுதி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்பிரேயர் எப்படி வெடித்தது அதனை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் வாகனம் வரவழைக்கப்பட்டு பட்டறை முழுவதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE