காவிரியில் தண்ணீர் திறப்பு - எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் விளக்கம்

By கி.கணேஷ்

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து இருந்த நிலையில், காவிரியில் தண்ணீர்திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஜூலை 27 மற்றும் 28ம் தேதிகளில் எழுதிய கடிதங்களில் காவிரி ஆற்றுப்படுகை மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்து பரவலாக விளம்பரப்படுத்தப்படுவதன் மூலம் பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் தங்க வைக்கப்படுவேருக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதிகளை செய்து தர முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். தேவைப்படின் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் போது பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, நீந்துவது, மீன்பிடிப்பது மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாகவும், ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு குழந்தைகள் செல்வதை தவிர்க்கவும் பெற்றோருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்திகளை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஆற்று நீரை கடந்து செல்ல பயன்படும் தரைப்பாலங்கள் மற்றும் பிற பாதைகளை கண்டறிந்து பொதுமக்களை எச்சரிக்க வேண்டு்ம். முன்னெச்சரிக்கை வழங்கும் போது பொதுமக்களிடையே எவ்வித தேவையற்ற அச்ச உணர்வும் ஏற்படாமல் கவனமாக செயல்பட வேண்டும். மேலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 365 வீரர்கள் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் மீட்புப்படைகள் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்க மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணிநேரமும் கூடுதல் அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் புகார் அளிக்கலாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE