கடலூர் அதிமுக பிரமுகர் புதுச்சேரியில் படுகொலை - பழிக்குப்பழியா என போலீஸார் விசாரணை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கடலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காரில் வந்த மர்ம நபர்கள் புதுச்சேரியில் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியார் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாபன். வயது 48. இவர் கடலுார் 25வது வார்டு அதிமுக அவை தலைவர். பெயிண்டர் வேலையும் செய்து வந்தார். நேற்று இரவு பாகூர் அருகே உள்ள திருப்பனாம்பாக்கம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கூத்து மற்றும் கரகாட்ட நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.

பின்னர், இன்று தனது நண்பரான கூத்து கலைஞர் ரங்கா என்பவருடன் பைக்கில் கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாகூர் அருகே உள்ள இருளஞ்சந்தை வாட்டர் டேங்க் அருகே சென்ற போது, பின்னால் காரில் வந்த கும்பல், பைக்கின் மீது வேகமாக மோதி கிழே தள்ளியது. உடனே, காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், பத்மநாபனை வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில், தலை, கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த புதுச்சேரி தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டன. சம்பவ இடத்தில் இருந்து அங்குள்ள தாங்கள் வரை மோம்பம் பிடித்து ஓடிய நாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும், தடயவியல் நிபுணர்கள் குழுவினர், சம்பம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் பிரேதத்தை மீட்ட போலீஸார், உடற் கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீனியர் எஸ்.பி., நாரா சைதயன்யா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து பாகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், "கடந்த ஆண்டு கடலுாரில் மஞ்சள் நீர் விழாவில், நடனம் ஆடியது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை, பத்மநாபன் தரப்பினர் கண்டித்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராரில் படுகாயமடைந்த பாஸ்கர் உயிரிழந்தார்.

திருப்பாபுலியூர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, பத்மநாபன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிறையில் இருந்து பத்மநாபன் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு கேட்டுள்ளார். தற்போது மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படு கொலை செய்யப்பட்டு இருப்பதன் மூலம் ஏற்கெனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் பத்மநாபன் வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE