தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 28) முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 30-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், ஜூலை 31 முதல் ஆக.3-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பார்வூட், வால்பாறை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, கோவை மாவட்டம் ஆனைமலை, மக்கினம்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செமீ, கோவை மாவட்டம் சோலையார், சின்கோனா, பொள்ளாச்சி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, நீலகிரி மாவட்டம் கோடநாடு, கிளன்மார்கன் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE